சென்னை: சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் விடிய, விடிய பேய் மழை கொட்டியது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு 207 மிமீ மழை சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்தது.
சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
கொடநாடு கொலை வழக்கு.. கனகராஜ் சகோதரர் தனபால் ஜாமீன் மனு தள்ளுபடி.. தீவிர விசாரணை
வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது
சென்னையின் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. சில பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியது. இதேபோல் மேற்கு தாம்பரம், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் கன மழையின் காரணமாக ஆங்காங்கே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் 100-க்கும் மேற்பட்டோர் கடுமையாக அவதி அடைந்துள்ளனர்.
விஷ ஜந்துக்கள்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் படாதபாட்டு பட்டு வரும் நிலையில் மழை நீரில் பாம்பு, பூரான் தேள் போன்ற கொடிய விஷமுள்ள ஜந்துக்கள் கிடக்கின்றன. சில விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் சிவகுமார்- ராஜேஸ்வரியின் ஒன்னறை வயது குழந்தை ஸ்வேதாவை விஷ ஜந்து ஒன்று கடித்துள்ளது.
குழந்தை வலியால் அழுது துடித்தது
இதனால் அந்த குழந்தை வலியால் அழுது துடித்தது. குழந்தையை அவரது பெற்றோர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தை உணராமல் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர், சிறுமியர்கள் தேங்கிய மழை நீரில் விளையாடி வருகின்றனர். இங்கு மட்டுமில்லாமல் சென்னையில் வெள்ளநீர் தேங்கி இருக்கும் பகுதியில் சிறுவர், சிறுமிகள் விளையாடி வருகின்றனர்.
பெற்றோர்களின் பொறுப்பு
பல இடங்களில் வெள்ளநீரில் பாம்பு, பூரான் தேள் போன்ற கொடிய உயிரினங்கள் அடித்து வரப்படுகின்றன. இந்த நிலையில் குழந்தைகளை மழை நீரில் விளையாட அனுமதித்தால் விஷ ஜந்துக்கள் அவர்களை தீண்ட வழி இருக்கிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மழைநீரில் விளையாட விடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/poisonous-animals-enter-the-house-as-uninvited-guests-in-the-flood-waters-in-chennai-438588.html