சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப மையம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘அடுத்த தலைமுறைக்கான இணையம் 3.0’ என்ற சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்றுநடைபெற்றது. இதை தமிழக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர்மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பிரதி எடுக்க முடியாத பாதுகாப்பு அம்சங்கள் (என்எஃப்டி)கொண்ட, மெய்நிகர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ‘நேற்றுஇன்று நாளை’ என்ற காணொலியையும் அவர் வெளியிட்டார். இதில், இந்திய தொழில் கூட்டமைப்பின் சென்னை மண்டல தலைவர் ஜெ.முருகவேல், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறி வருகிறது. கடந்த ஓராண்டாக தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் வளர்ச்சி உச்சத்தை எட்டி உள்ளது.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ‘யூ மேஜின்’ எனப்படும் 3 நாள் கருத்தரங்க மாநாடுசென்னையில் நடைபெற உள்ளது.தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு நிதி அளிப்பவர்கள் அனைவரும் இந்த கருத்தரங்க மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதன்மூலம் புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்கள் பயனடைவார்கள்.

30 ஆயிரம் சதுர அடியில்

தமிழகத்தில் 500 பஞ்சாயத்து பகுதிகளில் ‘பாரத் நெட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு கேபிள் டிவி விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பில் தகவல் தொழில்நுட்பமையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கையால் தமிழகத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை.

நாட்டில் பாஜக ஆளும் பகுதிகளில் சாதாரண மக்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லை. ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. பிரதமர் தமிழகம் வந்தபோது முறையான பாதுகாப்பு இருந்தது. இது மக்களுக்கே தெரியும். இதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து, வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஆளுநரை பாஜக நிர்வாகிகள் சந்தித்தபோது, நிலுவை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இருக்க வேண்டும். மாநில அரசு நிறைவேற்றும் தீர்மானத்தை ஆளுநர் ஏன் அலட்சியம் செய் கிறார் என்பது தெரியவில்லை. அரசியலமைப்புக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTA4NTU0LWl0LWNlbnRlci1hdC1hbm5hLXVuaXZlcnNpdHktY2hlbm5haS1taW5pc3Rlci1tYW5vLXRoYW5nYXJhai1pbmZvcm1hdGlvbi5odG1s0gEA?oc=5