சென்னை: சென்னையில் கடந்த ஆண்டை விட கொலை எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளதாகவும், வழிப்பறி சம்பவங்களில் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டு 94 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2022-ம் ஆண்டு 97 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடிகள் மீதான கடுமையான நடவடிக்கையால் முன்விரோதம் கொலைகள் பாதியாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வழிப்பறி சம்பவங்கள் 50%-க்கும் குறைவாக (506-ல் இருந்து 230 ஆக) பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வடசென்னையை விட தென் சென்னையில் அதிக கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், டகோ எனப்படும் சிறப்பு நடவடிக்கை மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக விரோத செயல்களில் இருந்து விலகி 5,575 சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆர்வங்களை வளர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் காவல்துறை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 424 பேர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2021-ம் ஆண்டு 31-ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 36 ஆக உயர்ந்துள்ளதாகவும், லீவ்-இந்த உறவில் இருக்கும் நபர்களுக்குள் தகராறு ஏற்படும் நிலையில் இந்த எண்ணிக்கை சற்று உயர்ந்து இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjkyNTHSAQA?oc=5