சென்னை:
தமிழக சட்டசபை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அவர்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவை கேவலமான நாடகத்தை அரங்கேற்றி உள்ளன.
தமிழகத்தில் எழுந்துள்ள லஞ்ச, ஊழல் புகார்களில் இருந்து தப்பவும், வாரிசு அரசியல் பற்றி மக்கள் பேசுவதை தவிர்க்கவும் கவர்னருக்கு எதிர்ப்பு என்பதை கையில் எடுத்து தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றன.
அவ்வைப் பாட்டியின் தமிழ் வரிகளை கூறி கவர்னர் தனது உரையை தொடங்கியபோதே அதனை அவமதிக்கும் வகையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கோஷமிட்டு வெளியேறியது அநாகரீகமான செயல் ஆகும்.
கவர்னரை அழைத்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இது மாநில நலனுக்கு உகந்ததல்ல. தவறான முன்னுதாரணமாகும்.
கவர்னர் உரையில் இடம் பெற்ற விஷயங்களை அவர் பேசவில்லை என்றால் அதுபற்றி முறைப்படி கவர்னர் மாளிகைகளில் தான் கேட்க வேண்டும். அதை விடுத்து தாங்கள் நினைப்பதை தான் கவர்னர் பேச வேண்டும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.
கவர்னர் உரையை தயாரித்து கவர்னரிடம் முறைப்படி ஒப்புதலும் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3ZhbmF0aGktc3Jpbml2YXNhbi1hY2N1c2F0aW9uLWdvdmVybm9yLWluc3VsdC1pc3N1ZS01NTg5MDHSAWVodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vYW1wL25ld3Mvc3RhdGUvdmFuYXRoaS1zcmluaXZhc2FuLWFjY3VzYXRpb24tZ292ZXJub3ItaW5zdWx0LWlzc3VlLTU1ODkwMQ?oc=5