சென்னை,
இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் போது காயம் ஏற்பட்டது.
தண்ணீரில் ஸ்கீ போர்டிங் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து ஜடேஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தொடரில் இருந்து விலகினார். பின்னர், காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின் பல மாதங்கள் ஓய்வில் இருந்த ஜடேஜா கடந்த 19-ம் தேதி வலை பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா இன்று சென்னை வந்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு – சவுராஷ்டிரா இடையேயான போட்டி வரும் செவ்வாய்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். அவர் போட்டியில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை வந்துள்ள ரவீந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வணக்கம் சென்னை’ என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜடேஜா உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் ஜடேஜா மீண்டும் களத்தில் இறங்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMimgFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL1Nwb3J0cy9Dcmlja2V0L3JhdmluZHJhLWphZGVqYXMtZXBpYy10d28td29yZC10d2VldC1zZW5kcy1jc2stZmFucy1pbnRvLWRlbGlnaHQtYXMtc3Rhci1hbGwtcm91bmRlci1yZXR1cm5zLXRvLWNoZW5uYWktODgzODU00gGeAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL1Nwb3J0cy9Dcmlja2V0L3JhdmluZHJhLWphZGVqYXMtZXBpYy10d28td29yZC10d2VldC1zZW5kcy1jc2stZmFucy1pbnRvLWRlbGlnaHQtYXMtc3Rhci1hbGwtcm91bmRlci1yZXR1cm5zLXRvLWNoZW5uYWktODgzODU0?oc=5