அலறும் சென்னை.. மிரளும் மக்கள்.. தலைநகரில் மட்டும் 1000ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு..! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை, மதுரை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று 4,329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,721ஆக அதிகரித்துள்ளது.  இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 2,357 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,378 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜூவ் காந்தி மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,019-ஆக உயர்ந்துள்ளது.

Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.

Last Updated 4, Jul 2020, 11:11 AM

Source: https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-coronavirus-death-thousand-reach-qcxjtw